தருமபுரியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
தருமபுரியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலினைப் பற்றி...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சென்று மக்களை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று (ஏப். 15) காலை நடைப்பயிற்சியின் போது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுடன் அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.
பாலக்கோடு நகரில் முக்கிய வீதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவைகளுக்கு நடந்தே சென்று, கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு ஒரு குழந்தைக்கு திராவிடன் என்றும் அவர் பெயர் சூட்டினார்.
அதைத்தொடர்ந்து ஸ்தூபி திடல், கடைவீதி, பேருந்து நிலையம், தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகளைச் சந்தித்து திமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அவர் பிரசாரம் மேற்கொண்டார்.