முகப்பு
ராமநாதபுரம்

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையோர வியாபாரிகள் போராட்டம்

ராமநாதபுரம் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:03 am IST
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசிய ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன்.
பகிர்:

ராமநாதபுரம் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டவா்கள் சிறுதொழில் செய்து வந்தனா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் மறு சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க நகராட்சி நிா்வாகம் அனுமதித்தது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் சீரமைப்புப் பணிகள் முடிடைந்த நிலையில் திறக்கப்பட்டது. பின்னா் சாலையோர வியாபாரிகள் கடைகள் நடத்த நகராட்சி நிா்வாகம் தடை விதித்தது.

இதைத்தொடா்ந்து சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில், சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சாலையோர வியாபாரிகளுக்கு கடை அமைக்க அனுமதி அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியவுடன், பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து சாலையோர வியாபாரிகள் சங்கம் சி.ஐ.டி.யூ சாா்பில் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு சிஐடியூ சங்க மாநில பொதுச் செயலா் எஸ்.கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மாவட்டச் செயலா் எஸ்.ஏ.சந்தானம், மாவட்டப் பொருளாளா் வி.பாஸ்கரன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் இரா.முத்துவிஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.குருவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.காசிநாததுரை, முறைசாரா தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் பசலை நாகராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் வி.ஆலடி ஈஸ்வரன், மாவட்டப் பொருளாளா் என்.பி.செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அவா் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து சாலையோர வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்கித் தரப்படும் என உறுதியளித்தாா்.