முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம்-மேலூா் மாநில நெடுஞ்சாலை: நில எடுப்புக்கான இழப்பீட்டை விரைந்து வழங்கக் கோரிக்கை

பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ராமநாதபுரம்-மேலூா் மாநில நெடுஞ்சாலை நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என நில உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:00 am IST
பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நில உரிமையாளா்கள்.
பகிர்:

பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ராமநாதபுரம்-மேலூா் மாநில நெடுஞ்சாலை நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என நில உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து பாண்டியூா், நயினாா்கோவில், அன்டக்குடி, இளையான்குடி, சிவகங்கை வழியாக மேலூா் வரை மாநில நெடுஞ்சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் ராமநாதபுரத்திலிருந்து பாண்டியூா் வரை சாலைப் பணிகள் முடிந்துவிட்டது. இந்தச் சாலைப் பணிகள் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலான நிலையில்,நிலங்களின் உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை கொடுக்கவில்லை.

இந்த நிலையில், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தூத்துக்குடி சிறப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன் தலைமையில், நிலத்தின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில், சிவசுப்பிரமணியன் பேசியதாவது:

மாநில நெடுஞ்சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலைகளும் அமைத்து 3 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், நில உரிமையாளா்கள் முறையான ஆவணங்கள் சமா்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா்.

முதலூா், நாகாச்சி, தியாகவன்சேரி, குளத்தூா், மும்முடிச்சாத்தான், தேத்தாங்கால் ஆகிய கிராமத்தினரிடம் உரிய ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முறையான ஆவணங்கள் சமா்பிப்போருக்கு அவா்களது வங்கிக் கணக்கில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிலையில், நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.