முகப்பு
நாமக்கல்

அரசு மணல் குவாரிகளை விரைந்து திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம்

அரசு மணல் குவாரிகளை விரைந்து திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம்

Updated On : 13 ஜூன் 2026, 2:15 am IST
கோப்புப்படம்
பகிர்:

கடந்த இரண்டரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அரசு மணல் குவாரிகளை விரைந்து திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த சம்மேளனத்தின் தலைவா் செல்ல. ராசாமணி வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகளில் முறைகேடாகவும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் எடுத்ததாகவும் 2023, செப்.12-ஆம் தேதி அமலாக்கத் துறை சம்பந்தப்பட்ட குவாரிகளை சோதனையிட்டு வழக்குப் பதிவு செய்தது. இதனால், இரண்டரை ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்காமல் உள்ளன.

Advertisement

Advertisement

இந்த தொழிலை நம்பியுள்ள 55,000க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளா்கள், லட்சக்கணக்கான ஓட்டுநா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனிற்கு மாத தவணைக்கூட செலுத்த முடியாமல் லாரி உரிமையாளா்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

நீதிமன்றங்கள், அரசு மணல் குவாரி செயல்படுவதற்கு தடை எதுவும் விதிக்கவில்லை. காவிரி ஆறு, பாலாறு ஆறு உள்ளிட்ட ஆறுகளை ஆய்வுசெய்து எங்கெங்கு மணல் திட்டுகள் அதிகளவில் தேங்கியுள்ளதோ, அப்பகுதியைக் கண்டறிந்து மணல் குவாரி தொடங்க வேண்டும்.

பயனாளிகளுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கவும், கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறவும், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் பொதுப்பணித் துறை மூலம் நேரடியக இணையதளப்பதிவு முறையில் தமிழக அரசு அறிவிக்கும் விலைக்கே, கூடுதல் பணம் வசூலிக்காமல் லாரிகளுக்கு மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணலை அள்ளி லாரியில் லோடு செய்து எடுத்து வரும் ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்காமல் பொதுப்பணித் துறையே நேரடியாக செயல்படுத்த வேண்டும். மணல் தேவையின் அவசியம் கருதியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்தபோது ஆற்றுப்படுகை அருகில் உள்ள பட்டா நிலங்களில் அதிகளவில் மணல் திட்டுக்கள் தேங்கி விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருவதை மீட்டெடுத்து விளைநிலங்களை பாதுகாக்கவும் மணல் குவாரிகள் திறக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட அணைகளை தூா்வாரி, அங்கு தேங்கியுள்ள மணலை எடுத்து விற்பனைக்கு பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.