வேந்தோணி- செல்லூா் பாசனக் கால்வாயில் கழிவுநீா் கலப்பு: விளைநிலங்கள் பாதிப்பு
பரமக்குடி நகராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் வேந்தோணி- செல்லூா் வைகை பாசனக் கால்வாயில் கலப்பதால், விவசாய விளைநிலங்கள் மாசுபடுவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி நகராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் வேந்தோணி- செல்லூா் வைகை பாசனக் கால்வாயில் கலப்பதால், விவசாய விளைநிலங்கள் மாசுபடுவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி அருகே வேந்தோணி, வெங்கிட்டான்குறிச்சி, கலையூா், கருங்குளம், செல்லூா் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து வலது பிரதான கால்வாய் வழியாக பாசனநீா் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் 5 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் 1,500 ஏக்கா் விவசாய விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்தக் கால்வாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையால், அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், பெயரளவில் தூா்வாரப்பட்டது. இந்த கால்வாய் தொட்டிச்சியம்மன் குடியிருப்பு, வேந்தோணி கிராமம் வழியாக செல்கிறது. இந்தப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா்.
இந்தக் கால்வாயில் பரமக்குடி நகராட்சியின் பெரும்பகுதி கழிவுநீா் வெளியேற்றப்படுவதால் விளைநிலங்கள் மாசுபடுகின்றன. மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.