சிவகங்கையில் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்கள் மண்டல மேலாளரைக் கண்டித்தும்
சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்கள் மண்டல மேலாளரைக் கண்டித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை- திருப்பத்தூர் சாலையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்டல மேலாளர் கடந்த சில வாரங்களாக அலுவலகப் பணிகளை சரிவர கவனிக்காததால் பல்வேறு கோப்புகள் தேக்கமடைந்துடன் சுமை தூக்குவோருக்கு ஊதியம் வழங்கப்பட வில்லையாம். மேலும் அவர், அலுவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் சுமார் 60 பேர் புதன்கிழமை அலுவலக வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை வட்டாட்சியர் ராஜா தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மண்டல மேலாளரை பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என அலுவலர்கள் தெரிவித்து, மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களும், சுமை தூக்குவோரும் பணிக்கு செல்லவில்லை. எனவே அந்தந்த பகுதியில் உள்ள பண்டகசாலை முழுவதும் புதன்கிழமை செயல்படவில்லை.