சிவகங்கை மாவட்ட விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிவகங்கை
விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் க.பிரபு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதிய உதவித் தொகையாக வழங்க தமிழக அரச அரசாணை பிறப்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற இயலாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.