விவசாயிகள் வேளாண் பணிக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் க.பாஸ்கரன்
விவசாயிகள் வேளாண் பணிக்கு நவீன கால இயந்திரங்களைப் பயன்படுத்தி அதிக லாபம் பெறவேண்டும் என,
விவசாயிகள் வேளாண் பணிக்கு நவீன கால இயந்திரங்களைப் பயன்படுத்தி அதிக லாபம் பெறவேண்டும் என, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க. பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட வேளாண்மைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் வேளாண்மை குறித்த கண்காட்சி அரங்கம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர், சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கை தொடக்கி வைத்துப் பேசியது: கடும் வறட்சி காரணமாக மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் களப்பணி மேற்கொண்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் உரிய விளைச்சலின்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் குறைவாக தண்ணீர் தேவைப்படும் சிறுதானிய வகைகள் மற்றும் மானாவாரிப் பயிர்களை பயிரிட முன் வரவேண்டும். மேலும், விவசாயிகள் வேளாண் பணிக்கு நவீன கால இயந்திரங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும் என்றார். அதன்பின்னர், பயனாளிகளுக்கு ரூ.12.55 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் சசிகலா, அட்மா திட்ட துணை இயக்குநர் இளங்கோவன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.