முகப்பு
தினமணி கதிர்

தெர்மாகோலில் கலை உருவம்

பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதமான பிளாஸ்டிக் பொருளான தெர்மாகோலின் பயன்பாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

Updated On : 31 மே 2026, 11:01 am IST
பகிர்:

பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதமான பிளாஸ்டிக் பொருளான தெர்மாகோலின் பயன்பாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குளிர்சாதன அமைப்பான்களைத் தயாரிக்கவும், மருந்துகள், ரசாயனங்கள், எளிதில் உருகக் கூடிய உணவுப்பொருள்களை குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கவும், மேடை அலங்காரம், கலைப்படைப்புகளை உருவாக்கவும் எனப் பலவற்றுக்குப் பயன்படும் இதன் அறிவியல் பெயர் 'எக்ஸ்பாண்டட் பாலிஸ்டிரீன்'.

இந்த பாலிஸ்டிரீன் மணிகளில் காற்றைச் செலுத்தி, அதை பல மடங்குகள் பெரிதாக்குவதன் மூலம் தெர்மாகோல் தயாரிக்கப்படுகிறது. தெர்மாகோல் என்பது பிராண்டின் பெயர்தான். இந்த தெர்மாகோலில் கவின்மிகு கலையுருவங்களைப் படைக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்வாணன்.

அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

''என் முன்னோர்கள் அரசர் காலத்திலிருந்து நகை செய்பவர்கள். தஞ்சாவூர் தட்டுகள் செய்வதிலும் அனுபவம் பெற்ற குடும்பம். இந்த பாரம்பரிய நீட்சியில் வந்த நான், தொடக்கத்தில் திரைத் துறையில் கலை இயக்குநராகப் பணியாற்றினேன். இந்த ஆர்வம் என்னை தெர்மாகோலின் பக்கம் ஈர்த்தது. அதுதான் எனக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும் நிரந்தரத் தொழிலாக அமைந்திருக்கிறது.

தொடக்கத்தில் திருமணம், பிறந்த நாள், துறை சார்ந்த விழாக்கள் முதலான நிகழ்வுகளில் அதனை மையப்படுத்தி 'தீம் ஒர்க்' என்று சொல்லப்படும் திட்டங்களைச் செய்தேன். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்து உருவங்களையும் தெர்மாகோலில் செய்து, அதனை நிகழ்விடத்தில் பொருத்தமாக அமைத்துத் தருவது வரை எனது பங்களிப்பு இருக்கும்.

மொத்த விற்பனைக் கிடங்குகளில் தெர்மாகோலை வாங்கி வருவேன். இதனை பிசிறு இல்லாமல் வெட்டுவதற்கென்று பிரத்தியேகமான கட்டர்கள் இருக்கின்றன. முதலில் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து, உருவங்களின் அளவும் வடிவமைப்பும் தேர்வு செய்யப்படும். முப்பரிமாண அளவுகளுக்கு ஏற்றவாறு தெர்மாகோலின் தடிமனைத் தீர்மானிப்போம். பின்னர் தெர்மாகோலின் மீது தேவையான வடிவத்தை இருபரிமாண ஓவியமாக வரைந்து, அதையொட்டி ஆக்ஸô வைத்து வெட்ட வேண்டும். பின்னர் கார்விங் வேலை. ஆக்ஸô அல்லது கத்தியை வைத்து மேடு பள்ளங்களுக்கு ஏற்றவாறு இழைத்து இழைத்து தேவைப்படும் வடிவமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

யானை, குதிரை போன்ற மிகப் பெரிய உருவங்களைச் செய்யும்போது தனித்தனி பாகங்களாக வெட்டிக் கொண்டு, பின்னர் பெவிக்கால் போன்ற பசை கொண்டு ஒட்டி இணைப்போம். அதன்பின்னர், தேவையான அளவு அக்ரிலிக் வர்ணங்களைப் பூசும் போது எதிர்பார்த்த உருவங்கள் கிடைத்துவிடும்.

விழாக்களுக்கான தீம் செட்டிங் வடிவங்களை ஒருமுறை வாங்கிவிட்டால் போதும். விழா முடிந்ததும் பிரித்து பாதுகாப்பாக வைத்துவிட்டால், நமது ஊரில் கொலு வைப்பது போல பல ஆண்டுகளுக்கு உபயோகப்படுத்த முடியும்.

கோயில் விழாக்களுக்கான தீம் வேலைகள் செய்யும்போது நிறைய புராணக் கதைகள், தொடர்புடைய வரலாறுகள் பற்றிய புரிதல் வேண்டும். இணையச் செயலிகளிலும் படங்களைச் சேகரிப்பேன். பின்னர், அதற்கேற்றவாறு என்னுடைய பணிகளைத் துவக்குவேன். சில சமயங்களில் வாடிக்கையாளர்களே படங்களை அளித்து, அதில் உள்ளவாறு அமைத்துத் தரச்சொல்லிக் கேட்பதும் உண்டு.

பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற ஹிந்து பண்டிகைகள், கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு பிறப்பு, ரமலான் விழாவின்போது மெக்கா மதினா, மசூதி போன்ற ஆர்ட் செட் செய்தல் என்று தீம் வேலைகள் செய்வேன். ஒருமுறை குடியரசு தின விழா அணிவகுப்புக்காக மாநில வனத்துறை சார்பாக 'பாரெஸ்ட்ரி தீம்' செட் செய்தது நிறைய பாராட்டுகளை வாங்கித் தந்தது. இது மறக்க முடியாத அனுபவம்.

வீடுகளில் அவங்காரத்துக்காக மிருகங்கள், பறவைகள், கடவுளர்கள், கோயில் கோபுரங்கள் முதலான வடிவங்களைத் தயாரிப்பேன்.

தமிழ்வாணன்

பண்டிகை, விழாக்கால வாசகங்கள், விழா நாயகர்களின் பெயர்கள் என தீம் வேலைகளுக்காக நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கும். ஆண்டுதோறும் வேலைக்குப் பஞ்சமில்லாத துறை இது. குறைந்த முதலீடே போதும். வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் எனக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். நல்ல கலையுணர்வு, கிரியேட்டிவிடி, நிறைய பொறுமை இருந்தால் போதும்... நிறைய சாதிக்கலாம்!'' என்கிறார் தமிழ்வாணன்.

-சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.