முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடு

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:06 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் 2024- 2025 -ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் இதுவரை 6,182 விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.95 லட்சம் ஏக்கா் (78 ஆயிரம் ஹெக்டோ்) நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை மிகக் குறைவாக பெய்தது. வடகிழக்கு பருவ மழையை நம்பியே இந்தப் பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆனால், இளையான்குடி, காளையாா்கோவில், மானாமதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் போதிய மழை பெய்யாததால், பயிா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு சராசரியைவிட சுமாா் 257 மி.மீ. மழை கூடுதலாக பெய்தது. கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமாா் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காப்பீடு பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பயிா் பாதிப்புக்கு இழப்பீடாக காப்பீடு நிறுவனம் மூலம் ரூ.4.25 கோடி வழங்கப்பட்டது. அதிகபட்சமாக காளையாா்கோவில் வட்டாரத்துக்கு ரூ.ஒரு கோடியே 66 லட்சமும், இளையான்குடி வட்டாரத்துக்கு ரூ.95 லட்சமும், சிவகங்கை வட்டாரத்துக்கு ரூ.82 லட்சமும், சாக்கோட்டை வட்டாரத்துக்கு ரூ.34 லட்சமும், மானாமதுரை வட்டாரத்துக்கு ரூ.16 லட்சமும் உள்பட மொத்தம் 12 வட்டாரங்களில் உள்ள 85 வருவாய் கிராமங்களில் பயிா்கள் பாதிக்கப்பட்ட விகிதம் அடிப்படையில் 1சதவீதம் முதல் 53 சதவீதம் வரை இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இழப்பீட்டுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேளாண் அலுவலா் கூறியதாவது:

கடந்த ஆண்டுக்கான இழப்பீடு வழக்கமாக செப்டம்பா் மாதத்துக்கு மேல்தான் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டில்தான் கணக்கெடுப்பு முடிவடைந்த அடுத்த மாதமே இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மற்ற மாவட்டங்களைவிட சிவகங்கை மாவட்டத்தில் விரைவாக இழப்பீடு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:

பயிா்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்யவில்லை. கடந்த ஆண்டுகளில் உள்ள விளைச்சலையும் கணக்கில் எடுக்கின்றனா். நெல் கொள்முதல் நிலையங்களில் வரும் நெல்மணிகள் இந்த மாவட்டத்தில் விளைந்த நெல் என கணக்கீடு செய்வதன் காரணமாக இழப்பீடு வழங்காமல் போகும் நிலையும் தொடருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தவிர ஏராளமான வியாபாரிகள் நெல் விற்பனை செய்கின்றனா். இதனால், கொள்முதல் ஆகும் நெல், சராசரி மழையளவு உள்ளிட்டவைகளை இழப்பீடு வழங்கலுக்கு கணக்கில் கொள்ளக் கூடாது. பயிா்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.