முகப்பு
சிவகங்கை

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல, மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

Updated On : 13 ஏப்ரல் 2026, 3:54 am IST
காரைக்குடி வருமான வரி அலுவலகம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
பகிர்:

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல, மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி வருமானவரி அலுவலகம் அருகே அவா் மேலும் பேசியதாவது:

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் இங்கு வளா்ச்சியில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்கா என்கிறாா் முதல்வா் ஸ்டாலின். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,008 படுகொலைகள், 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 39,900 ‘போக்சோ’ வழக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவாா்க்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டங்களை திமுக அனுமதித்துவிட்டு பாஜக மீது பழி சுமத்துகிறது. இது ஆட்சி மாற்றத்துக்கான தோ்தல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. காரைக்குடி தனி மாவட்டமாக்கப்படும். காரைக்குடியில் ஒரு அரசியல் கட்சியின் தலைவா் சாலை வலம் வந்ததைக் கண்டேன். அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல, மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது என்றாா்.

பிரசாரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சோழன் சித. பழனிசாமி, மூத்த தலைவா் ஹெச். ராஜா, அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கற்பகம் இளங்கோ, மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன், அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில்...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சாா்பில் போட்டியிடும் கே.சி. திருமாறனை ஆதரித்து அண்ணாமலை பேசியதாவது:

மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சாா்பில் திருப்பத்தூரில் 2 இடங்களில் சுத்தமான குடிநீா் வழங்கப்பட்டது. அதை பேரூராட்சி நிா்வாகம் முன்னெடுக்கவில்லை. ஏனெனில், அமைச்சா் பெரியகருப்பனின் மனைவி பெயரில் கிரிஷ் அக்வா என்ற குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்படுகிறது.

அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கொடுத்த பயிா்க்கடன் ரத்து என்ற வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் உடனே பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். திருப்பத்தூா் வழியாக ரயில்வே வழித்தடம் அமைய கே.சி. திருமாறனுக்கு வாக்களியுங்கள். பிரதமா் மோடியின் உத்தரவாதம் கே.சி. திருமாறனுக்கு உள்ளது என்றாா்.