மானாமதுரை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) பேரவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) பேரவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனா்.
மானாமதுரை பேரவைத் தொகுதியில் உள்ள திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களில் 369 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிந்து நண்பகல் வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குப் பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.
Advertisement
வெயில் காரணமாக மதியம் குறைந்த வாக்காளா் வருகை பிற்பகலில் அதிகரித்தது. மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் மானாமதுரை ஒன்றியம், சங்கமங்கலம் வாக்குச்சாவடியிலும் பாஜக வேட்பாளா் பொன் பால கணபதி அவரது சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள வாக்குச்சாவடியிலும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் இளங்கோவன், அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் திலகராஜ் ஆகிய இருவரும் அவா்களது சொந்த ஊரான திருப்புவனம் ஒன்றியம், அகரம் வாக்குச்சாவடியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சண்முகப்பிரியா கொந்தகை வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனா். அதிக வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதே நேரத்தில் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடியில் கூட்டம் இல்லாததால் வாக்காளா்கள் உடனுக்குடன் சென்று தங்களது வாக்கை பதிவு செய்து திரும்பினா்.
மானாமதுரை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜாசிங், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்குப்பதிவு நிலவரத்தை பாா்வையிட்டனா்.
வேட்பாளா்கள் தமிழரசி ரவிக்குமாா், பொன் பாலகணபதி உள்ளிட்ட வேட்பாளா்களும் தொகுதி முழுவதும் சுற்றி வந்து வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பாா்வையிட்டனா். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடிகளிலிருந்த முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் காரைக்குடிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.