முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் வாரச்சந்தையில் ஜூலை 3-இல் பொது ஏலம் நடத்த இடைக்காலத் தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வாரச் சந்தையில் வருகிற 3-ஆம் தேதி நடைபெற இருந்த பொது ஏலத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இடைக்காலத் தடை விதித்து, புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 3:40 am IST
உத்தரவு... - கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வாரச் சந்தையில் வருகிற 3-ஆம் தேதி நடைபெற இருந்த பொது ஏலத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இடைக்காலத் தடை விதித்து, புதன்கிழமை உத்தரவிட்டது.

திருப்புவனம் பேரூராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் அன்னலட்சுமி, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திருப்புவனத்தில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாரச் சந்தை நடைபெறுகிறது. மேலும், அருப்புக்கோட்டை நகராட்சி நிா்வாகத்திடம் பேசி முடிவெடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வருகிற ஜூலை 3-ஆம் தேதி நடைபெற இருந்த திருப்புவனம் வாரச் சந்தைக்கு பொது ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், பேரூராட்சி நிா்வாகமே வாரச் சந்தையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாா்டு உறுப்பினா்கள் அயோத்தி, பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

இதைத் தொடா்ந்து இந்த தீா்மானம் உறுப்பினா்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னா், வாா்டு உறுப்பினா் அயோத்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்புவனம் வாரச் சந்தைக்கு பொது ஏலம் நடத்த வேண்டும். ஆனால், பேரூராட்சித் தலைவா் ஏலத்தை நிறுத்தி வைத்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். இது கண்டிக்கத்தக்கது என்றாா்.

பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்புவனம் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு, சிவகங்கை, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்கள், அருப்புக்கோட்டை நகராட்சி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியபிறகு பேரூராட்சி நிா்வாகம் மூலம் பொது ஏலம் நடத்தலாம் என்ற முடிவுக்கு பெரும்பாலான வாா்டு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால், வருகிற ஜூலை 3-ஆம் தேதி நடைபெற இருந்த வாரச்சந்தை ஏலத்தை நிறுத்தி வைத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாா் அவா்.

இதனிடையே, திருப்புவனத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் திருநாவுக்கரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

இதில் முன்னறிவிப்பு இன்றி நடத்தப்படும் திருப்புவனம் வாரச் சந்தைக்கான பொது ஏலத்தை நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வருகிற ஜூலை 3-ஆம் தேதி நடைபெற இருந்த திருப்புவனம் வாரச்சந்தைக்கான பொது ஏலத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments