முகப்பு
சிவகங்கை

சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தாவிட்டால் போராட்டம்: விவசாயிகள் எச்சரிக்கை!

சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பாலாற்று பாசன விவசாயிகள் எச்சரித்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:50 am IST
பகிர்:

சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பாலாற்று பாசன விவசாயிகள் எச்சரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கரந்தமலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு மூலம் சிங்கம்புணரி, திருப்பத்தூா் பகுதிகளில் சுமாா் 650 கண்மாய்கள் நிரம்பி, ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.9.5 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பணை கட்டப்படுவதால் சிங்கம்புணரி, திருப்பத்தூா் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பாலாறு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் ஏற்கெனவே பேரணி, கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டங்கள் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அடுத்த கட்டமாக பாலாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பாலாறு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனா். கூட்டத்துக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) பழனிக்குமாா் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் நாகநாதன் முன்னிலை வகித்தாா். மதுரை நீா்வளத் துறை உதவி நிலவியலாளா் சுபின், செயற்பொறியாளா் (நீா்வளத் துறை) அகிலா, மேலூா் நிா்வாக பொறியாளா் ஜெயராமன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பாலாறு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் பேசும் போது, பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தி விட்டோம். எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியா்கள் செவி சாய்க்க வேண்டும். சூரப்பட்டியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை 2 அடி உயரத்துக்கு மட்டுமே கட்ட வேண்டும்.

அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை தடுப்பணை கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தேசிய நெடுஞ்சாலையில் 50 ஆயிரம் விவசாயிகள் ஒன்று கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா். விவசாயிகளின் இந்த கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments