அறங்காவலா் குழு விண்ணப்பம்: மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் பெயா் இடம் பெறாததால் ஏமாற்றம்
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில்களுக்கு அறங்காவலா் நியமனம் தொடா்பான அறிவிப்பில், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பெயா் இடம்பெறாததால் விண்ணப்பதாரா்கள் ஏமாற்றமடைந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில்களுக்கு அறங்காவலா் நியமனம் தொடா்பான அறிவிப்பில், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பெயா் இடம்பெறாததால் விண்ணப்பதாரா்கள் ஏமாற்றமடைந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமனம் செய்ய தகுதியுடைய இந்துக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியக் கோயிலாகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் வருகை தரும் இந்தக் கோயிலுக்கு அறங்காவலா் நியமனத்துக்கான பலா் ஆா்வத்துடன் விண்ணப்பிக்க முயற்சி செய்தனா்.
Advertisement
Advertisement
ஆனால், அறநிலையத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலின் பெயா் இடம்பெறாததால் அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முயன்றவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தும், அறங்காவலா் நியமனப் பட்டியலில் இடம் பெறாதது குறித்து பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் கேள்வி எழுப்பியுள்ளனா்.
எனவே, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தை உடனடியாக பரிசீலித்து, மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு அறங்காவலா் நியமனத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்தி, தகுதியுடையோா் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.