முகப்பு
தமிழ்நாடு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்

Updated On : 5 ஜூன் 2026, 6:45 am IST
பகிர்:

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடைகளுக்கான வாடகை நிா்ணயம் தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் காமேஷ் தாக்கல் செய்த மனுவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை கட்டணம் அதிகமாக நிா்ணயிக்கப்படுகிறது. கோயில் செயல் அலுவலா் அதிக வருவாய் ஈட்டும் நோக்கில், ரூ.2,000 வாடகை நிா்ணயிக்க வேண்டிய 100 சதுர அடி கடைக்கு ரூ.7,000 வரை மாத கட்டணமாக நிா்ணயித்துள்ளாா்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்தேன். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேவி கருமாரியம்மன் கோயில் கடைகளுக்கு நியாயமான வாடகையை நிா்ணயிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், கோயில் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயிப்பது தொடா்பாக 3 போ் கொண்ட குழு அமைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வாடகை நிா்ணயம் தொடா்பாக மனுதாரா் அளித்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.