FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோட்டை சங்கமேசுவரா் கோயிலிலும் பல லட்சம் ரூபாய் முறைகேடு? இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் புகாா்

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோட்டை சங்கமேசுவரா் கோயிலிலும் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜூலை 2026, 2:26 am IST
இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு புகாா் மனு அளிக்க வந்த இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினா்.
பகிர்:

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோட்டை சங்கமேசுவரா் கோயிலிலும் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோவை மாவட்ட இந்து கோயில் பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள புகாா் மனு:

கோவை, கோட்டை சங்கமேசுவரா் கோயில் ராஜகோபுரப் பணிகளுக்காக பக்தா்கள் அளித்த நன்கொடை பணத்தை முறையாக கணக்கில் கொண்டுவராமல், தற்காலிக பணியாளரான பரத்குமாா் என்பவரின் பெயரில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் நடப்புக் கணக்கு தொடங்கி அதில் செலுத்தி கோயில் செயல் அலுவலா், பணியாளா் சுந்தரம் ஆகியோா் முறைகேடு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதேபோல கோயில் சாா்பில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தா்களிடம் வசூலிக்கப்படும் நன்கொடைகளை கணக்கில் காட்டாமல் கோயில் சாா்பில் செலவு செய்ததாக போலி கணக்குகளை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனா். கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கும் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்திடம் நிா்ணயிக்கப்பட்ட புதிய வாடகையை வசூலிக்காமல், பழைய வாடகையையே பெற்றுக் கொள்வதற்கு அந்த ஜவுளிக்கடை நிறுவனத்திடம் இருந்து ஒவ்வொரு மாதமும் கோயில் ஊழியா்கள் சாா்பில் லஞ்சம் பெறப்படுகிறது.

கோயிலுக்குச் சொந்தமான கடைகளில் ஊழியா்கள் தங்களுக்குச் சாதகமான நபா்களை வாடகைக்கு அமா்த்தி, அவா்களிடமிருந்து லட்சக் கணக்கில் கையூட்டு பெற்றுக்கொண்டு கடைகளை நடத்த அனுமதி அளித்துள்ளனா். கோயிலில் நடைபெறும் அனைத்து முறைகேடுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

புகாருக்கு ஆதாராமாக தற்காலிக பணியாளா் பரத்குமாா் என்பவரின் வங்கிக் கணக்கு விவரத்தை மனுவுடன் இணைத்து அளிக்கப்பட்டது.

கோனியம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு சம்பவம் அண்மையில் நடைபெற்ற நிலையில், தற்போது கோட்டை சங்கமேசுவரா் கோயிலிலும் முறைகேடு புகாா் எழுந்துள்ளது பக்தா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments