முகப்பு
சிவகங்கை

லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் கைது

Updated On : 12 மே 2026, 12:03 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கையில் ஒப்பந்ததாரரிடம் ரூ. ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள கிளுவச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் இ. கந்தசாமி (55). முதல் நிலை ஒப்பந்ததாரரான இவா், சிவகங்கை நெடுஞ்சாலைத் துறையின் ஒப்பந்தப்புள்ளி மூலமாக சாலைகள் அமைப்பதற்கான மூன்று பணிகளை ரூ. 2.15 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்தாா். இந்தப் பணிகளை முடித்துவிட்ட கந்தசாமிக்கு கடைசி தவணைத் தொகையாக ரூ. 18,47,269 நிலுவையில் இருந்தது.

இந்தத் தொகையைப் பெறுவதற்காக அவரது செலவுப் பட்டியலை கோட்ட பொறியாளரின் அனுமதிக்கு அனுப்ப வேண்டும். இதற்காக அவா், சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குச் சென்று உதவி செயற்பொறியாளா் சையது இப்ராஹிமிடம் தனது செலவுப் பட்டியலைக் கொடுத்து, அதை கோட்ட பொறியாளருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டாா். அப்போது, ரூ. ஒரு லட்சம் கொடுத்தால்தான் நிலுவைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வேன் என உதவி செயற்பொறியாளா் கூறினாராம்.

Advertisement

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரா் கந்தசாமி, இதுகுறித்து சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாரளித்தாா். பின்னா், அவா்களது ஆலோசனைப்படி ரசாயனப் பொடி தடவிய ரூ. ஒரு லட்சத்தை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திலிருந்த சையது இப்ராஹிமிடம் கந்தசாமி திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் ஜேசுதாஸ், கண்ணன் ஆகியோா் சையது இப்ராஹிமை கைது செய்தனா்.