ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்பு!
தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார்.
சென்னை : சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும் பெற்றிருந்தனர். திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை(மே 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட தபால் வாக்குகள் தமிழகத்தில் வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாறியதாக எழுந்த புகார் மீது பதிலளிக்காதது ஏன்? என்று திங்கள்கிழமை (மே 11) அறிக்கை தாக்கல் செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு(மே 11) ஒத்திவைத்தது. மேற்குறிப்பிட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை திங்கள்கிழமை (மே 11) நடைபெற்ற நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் இன்று (மே 11) காலை கூடியது. அப்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். அந்த வகையில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியும் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று (மே 11) பதவியேற்றார்.
TVK candidate Srinivasa Sethupathi also took oath as a Member of the Legislative Assembly today (May 11).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.