சின்னமனூரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம்: 22 பேர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூரில் போலீஸாருக்கு லஞ்சம் கொடுக்க பணம் வேண்டும் எனக் கூறி புதன்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில்
தேனி மாவட்டம் சின்னமனூரில் போலீஸாருக்கு லஞ்சம் கொடுக்க பணம் வேண்டும் எனக் கூறி புதன்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சின்னமனூரில் சில நாள்களுக்கு முன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மூக்கையா தேவர் நினைவு தினத்தையொட்டி போஸ்டர் ஒட்டப்பட்டது. அதனை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி பாஸ்கரன் கிழித்ததாகக் கூறி இரு கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்துஇது தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் காவல் சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி வழக்குப் பதிவு செய்தார்.
ஆனால், லஞ்சம் பெற்றுக் கொண்டு முறையாக விசாரிக்க வில்லை எனக் கூறி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் சிலர் புதன்கிழமை சின்னமனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, போலீஸார் இரு தரப்பினர் மீதும் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அவர்கள் சமரசம் அடையவில்லை. இதைத் தொடர்ந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் போலீஸாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, சின்னமனூர் முக்கிய வீதிகளில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.