பேருந்து நிலையம் அருகே அரசு மதுக் கடைகள்: இடம் மாற்ற தேனி ஆட்சியர் உத்தரவு
தேனி அல்லிநகரம் கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் 4 அரசு மதுக்கடை மற்றும்
தேனி அல்லிநகரம் கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் 4 அரசு மதுக்கடை மற்றும் மதுக்கூடங்கள் இடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் கூறியது: மாவட்டத்தில் 90 அரசு மதுக் கடை மற்றும் மதுக் கூடம் செயல்பட்டு வந்தன. தற்போது இதில் 30 மதுக் கடைகளில் மட்டுமே மதுக் கூடங்கள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.
ஆனால், உரிமம் பெறாத இடங்களிலும் மதுக் கூடங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அங்கு தரமற்ற உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், அனைத்து மதுக் கடை மற்றும் மதுக் கூடங்களிலும் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை நடைபெறுவதை தடுப்பதற்கும், தேனி அல்லிநகரம் கர்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய பகுதியில் செயல்பட்டு வரும் 4 அரசு மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை இடம் மாற்றம் செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 4 மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் ஒரு வாரத்திற்குள் இடம் மாற்றப்பட்டு விடும் என்றார்.