ஆண்டிபட்டியில் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் அவதி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையால் பொதுமக்கள்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் மர்மக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அப்பகுதிகளில் நிலையில் கொசுக்களின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் கொசுக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஏற்கெனவே மழையால் காய்ச்சல், சளித் தொல்லையால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் மர்ம காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு கொசு மருந்து புகை அடித்தும், பொதுமக்களிடையே கொசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருப்பினும் கொசு உற்பத்தியை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் ஆண்டிபட்டி நகரில் கொசுக்களால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே ஆண்டிபட்டி நகரில் கொசுக்களை ஒழிக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.