மாநில அளவிலான கோ-கோ போட்டி: தேனி மகளிர் அணி முதலிடம்
ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ போட்டியில் தேனி மகளிர் அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.
ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் தேனி மாவட்ட கோ - கோ கழகம், லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளி சார்பில் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கோ-கோ போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 20-க்கு மேற்பட்ட பெண்கள் அணிகள் கலந்து கொண்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் தேனி அணி முதலிடத்தையும், சென்னை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது. முதலிடம் பெற்ற தேனி மகளிர் அணிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரிசுகள் மற்றும் கோப்பையை வழங்கினார்.
இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பரிசுகள் மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ரோஸி வித்யாலயா பள்ளி நிர்வாக இயக்குநர் ரா.முத்துகுகன் செய்திருந்தார்.