வீட்டுமனை வழங்க தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை
போடி வட்டாரம், கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
போடி வட்டாரம், கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கொழுக்குமலை எஸ்டேட் தொழிலாளர்கள் 30 பேர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: கொழுக்குமலை தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்துக்கு உள்பட்ட இடத்தில் 40 தோட்டத் தொழிலாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். பணி ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு சொந்த ஊர்களில் வீடு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாததால், கொழுக்குமலையை விட்டுச் செல்லமுடியாமல் அங்கேயே வசித்து வருகிறோம்.
எனவே, கொழுக்குமலை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.