ஆண்டிபட்டி அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ஆண்டிபட்டி அருகே கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆண்டிபட்டி அருகே கடந்த 2 மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். எனவே, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது, தங்கள் பகுதியில் ஒரேயொரு சிறிய குடிநீர்த் தொட்டி மட்டுமே உள்ளதாகவும், அதிலும் கடந்த 2 மாதங்களாக முறையாக தண்ணீர் ஏற்றப்படுவதில்லை எனவும், குடிநீருக்காக வெகு தொலைவு அலைந்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், தங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தனிநபர்கள் திருடுவதாகவும், இது குறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.