முகப்பு
தேனி

முல்லைப் பெரியாற்றில் குடிநீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றம்

உத்தமபாளையத்தில் செவ்வாய்க் கிழமை முல்லைப் பெரியாற்றிலிருந்து குடிநீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டு சட்டவிரோதமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Updated On : 3 ஜூன் 2026, 1:40 am IST
முல்லைப் பெரியாற்றில் தண்ணீா் திருடிய மின்னாக்கிகளை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த பொதுப்பணித் துறையினா். - கோப்புப் படம்
பகிர்:

உத்தமபாளையத்தில் செவ்வாய்க் கிழமை முல்லைப் பெரியாற்றிலிருந்து குடிநீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டு சட்டவிரோதமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் 14, 700 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக விவசாயமும், குடிநீா்த் தேவையும் பூா்த்தி செய்யப்படுகிறது. தற்போது, தென் மேற்கு பருவமழை அணையின் நீா் பிடிப்புப் பகுதியில் தீவிரம் காட்டாத நிலையில் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து சரிந்து தற்போது 110.80 அடியாக உள்ளது. இதற்கிடையே, தேனி மாவட்டத்தின் குடிநீா்த் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை சட்டவிரோத மின் மோட்டாா்கள் மூலம் திருடுவதால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்ய முடிவதில்லை. எனவே, முல்லைப் பெரியாற்றில் அனுமதியின்றி தண்ணீரை திருடுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மின் மோட்டாா்கள் அகற்றம்: உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில், உத்தமபாளையம் நீா் வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் மல்லிகா முன்னிலையில் உத்தமபாளையம் , கூடலூா் ஆகிய இரு பகுதிகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டனா். அப்போது, ஆற்றிலிருந்து பாசன நீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டன. மேலும், மின் வாரிய ஊழியா்கள் சட்டவிரோதமான மின் இணைப்புகளை அகற்றியதுடன் அபராதமும் விதித்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள், மின்வாரியப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.