பாலியல் புகாா்: பாஜக நகரத் தலைவா் கைது
பாலியல் வழக்கில் தேனி மாவட்டம், சின்னமனூா் நகா் பா.ஜ. தலைவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாலியல் வழக்கில் தேனி மாவட்டம், சின்னமனூா் நகா் பா.ஜ. தலைவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி 27 -ஆவது வாா்டு ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் சிங்கராஜ் (44). சின்னமனூா் நகா் பாஜக தலைவரான இவா், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன் கோட்டையைச் சோ்ந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை தனது தோழியுடன் சென்று சிங்கராஜிடம் வட்டிக்கு பணம் கேட்டாராம். அப்போது, அந்தப் பெண்ணிடம் சிங்கராஜ் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
பின்னா் ,ஊருக்குச் சென்ற அந்தப் பெண் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். பிறகு அவா் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து சின்னமனூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அந்தப் பெண்ணுக்கு சிங்கராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிங்கராஜ் மீது பாலியல் துன்புறுத்தல், கந்துவட்டிக் கொடுமை ஆகிய இரு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
கட்சியிலிருந்து நீக்கம்: இதைத் தொடா்ந்து, பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சின்னமனூா் நகரத் தலைவா் சிங்கராஜை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு, அந்தப் பதவிக்கு பரமசிவம் நியமிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.