விருதுநகர் நகராட்சி பூங்காவை சீரமைக்க கோரிக்கை
விருதுநகர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள நகராட்சி பூங்கா பாரமரிப்பில்லாததால், சிதிலமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது.
விருதுநகர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள நகராட்சி பூங்கா பாரமரிப்பில்லாததால், சிதிலமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சி 9-ஆவது வார்டுக்கு உள்பட்ட ராமச்சந்திரன் தெருவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2009-2010-இல் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டது.
அதில் செயற்கை நீரூற்று, நடைபாதை, பூச்செடிகள், சிறுவர், சிறுமிகளுக்கான சறுக்கு மற்றும் ஏற்ற, இறக்கம் முதலானவை அமைக்கப்பட்டன. மேலும், சுற்றுச் சுவர் உள்ள பகுதிகளில் வண்ண ஓவியங்களும் வரையப்பட்டன.
பூங்கா பணிகள் நிறைவடைந்தும் உடனடியாக திறக்கப்படவில்லை. பின்னர், பொதுமக்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பூங்கா பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ஆனால், பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று செயல்படவில்லை. மேலும், ஓவியங்கள் வண்ணமிழந்து விட்டன. அதேபோல், பராமரிப்பு இல்லாததால் பூங்காவின் உள் பகுதியில் முள்செடிகளும் வளர்ந்தன.
இதனால், பூங்காவுக்கு சிறுவர், சிறுமியர், பொது மக்கள் வருகை முற்றிலும் குறைந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சிலர், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, விருதுநகரில் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பலர் குழந்தைகளுடன் மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் கூடுதல் பணம் செலவு, கால விரயம் ஏற்படுகிறது.
எனவே, விருதுநகர் ராமச்சந்திரன் தெருவில் உள்ள பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.