விருதுநகரில் இலவச இருதய சிகிச்சை முகாம்:10 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு
விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச இருதய சிகிச்சை முகாமில், 200-க்கும் மேற்பட்ட
விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச இருதய சிகிச்சை முகாமில், 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 10 குழந்தைகளுக்கு சென்னையில் இலவச அறுவைச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் சுழற் சங்கம், சென்னை அப்போலோ குழந்தை மருத்துவமனை இணைந்து, டிவிஎஸ் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான இலவச இருதய மருத்துவப் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இம்முகாமில், மதுரை அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், இருதய படபடப்பு, நடுக்கம், நினைவு இல்லாமல் இருத்தல், உயரம், எடை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அதில், இருதயத்தில் குறைபாடுடைய 10 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, முகாமை சுழற் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ஷாஜகான் தொடக்கி வைத்தார். இதில், ராஜபாளையம் மருத்துவர் கோதண்டராமன், சுழற் சங்கத் தலைவர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபரும், சுழற் சங்கத் தலைவருமான இதயம் முத்து செய்திருந்தார்.