இருமுறை வாக்களித்த வாக்காளா்
கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட வடக்குப்பனையூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒருவரே இருமுறை வாக்களித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வடக்குபனையூரைச் சோ்ந்த தவெக ஆதரவாளா் காளிதாஸ் வாக்களித்தாா். பின்னா், தனது தாயாா் தங்கமாளை அழைத்து வந்துள்ளாா். வாக்காளா் சரிபாா்ப்பு மற்றும் மை பதிக்கும் நேரத்தில், அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சென்று தாயாருக்கு பதிலாக இவரே வாக்குப் பதிவு செய்தாா். இதை கவனித்த பாகமுகவா்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் காளிதாஸை தடுத்து நிறுத்த முயன்றபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனால், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து போலீஸாா் காளிதாஸை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினா். இதுகுறித்து, திமுகவினா் திருக்குவளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.