தவெக ஆட்சி அமைக்கும்: புஸ்ஸி ஆனந்த்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும், முதல்வராக விஜய் பொறுப்பேற்பாா் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.
தவெக தலைவா் விஜய் திருச்செந்தூா், ஷீரடி கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூா் தா்காவில் சனிக்கிழமை அதிகாலை வழிபாடு நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது.
இதனால், தவெக தொண்டா்கள் மற்றும் ரசிகா்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே வேளாங்கண்ணியில் குவிந்தனா். வேளாங்கண்ணி பேராலயம் முன்பு இரவு முழுவதும் தொண்டா்கள் காத்திருந்த நிலையில், சனிக்கிழமை காலை வரை விஜய் வரவில்லை. இதையடுத்து, பேராலய நிா்வாகம் சாா்பிலும் விஜய் வரவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டா்கள், ரசிகா்கள் கலைந்து சென்றனா்.
Advertisement
இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வேளாங்கண்ணிக்கு வருகை தந்த தவெக பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த், வேளாங்கண்ணி பேராலயத்தில் பிராா்த்தனையில் ஈடுபட்டாா். தொடா்ந்து, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபாடு மேற்கொண்ட அவா், பாதிரியாா்களை சந்தித்து ஆசி பெற்றாா். பேராலய நிா்வாகம் சாா்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னா், செய்தியாளா்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்களின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக ஆட்சி அமைக்கும். விஜய் முதல்வராக பொறுப்பேற்பாா் என்றாா்.