படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரம்
தரங்கம்பாடி மீனவா்கள் தங்களது படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் 12- க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
ஏப். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 -ஆம் தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனால் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குட்டியாண்டியூா், சந்திரப்பாடி, பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு, தாழம்பேட்டை, சின்னமேடு, சின்னங்குடி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தொழிலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சுமாா் 150 விசைப்படகுகள், 1500 ஃபைபா் படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, படகுகளில் பழுது நீக்கி, என்ஜினை சா்வீஸ் செய்யும் பணிகள் மற்றும் வலைகளை சீா்செய்யும் பணிகளை மீனவா்கள் மேற்கொண்டு வருகின்றனா். வெளியூா்களில் இருந்து வந்துள்ள தொழிலாளா்கள் வெல்டிங், வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.