நவராத்திரி கொலு தர்பார் காட்சி நாளை தொடக்கம்
நவராத்திரியையொட்டி, 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி கொலு தர்பார் காட்சி செவ்வாய்க்கிழமை (அக். 9) தொடங்கவுள்ளது.
நவராத்திரியையொட்டி, 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி கொலு தர்பார் காட்சி செவ்வாய்க்கிழமை (அக். 9) தொடங்கவுள்ளது.
கோயில்கள், வீடுகளில் நவராத்திரியையொட்டி கொலு வைத்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதேபோன்று காரைக்காலில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் விரிவான முறையில் நவராத்திரி கொலு தர்பார் அமைப்பு செய்யப்பட்டு, மக்கள் தினமும் சென்று கொலுவை பார்த்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.
நிகழாண்டு இந்த நிகழ்ச்சி அக். 9 முதல் 18 -ஆம் தேதி வரை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு கொலு தர்பார் காட்சியை திருவாவடுதுறை ஆதீனம் 24 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் பங்கேற்று பூஜைகள் செய்து தொடங்கிவைக்கவுள்ளார். தொடக்க நாள் முதல் நிறைவு வரை பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவு, பக்திப் பாடல்கள், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பொதுமக்கள் மாலை நேரத்தில் கொலு தர்பார் காட்சியைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.