காரைக்கால் மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரிக்கை
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.எம். தமீம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கலந்துகொண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். புதுச்சேரி மாநில அரசியல் நிலை குறித்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் வே.கு. நிலவழகன், அ. வின்சென்ட் ஆகியோர் பேசினர்.
தீர்மானங்கள்:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் எந்தவொரு பிரிவுக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கிடையாது. விபத்து, இருதயம், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குரிய நோயாளிகள் படும் அவதி அதிகம். எனவே இந்த மருத்துவமனையின் தரத்தை விரைவில் உயர்த்த வேண்டும்.
ஜிப்மர் நிர்வாகம் இந்த மருத்துவமனை மேம்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியைக்கொண்டு திட்டப்பணிகளை விரைவாக தொடங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அண்மை காலமாக புகார் கூறப்படுகிறது. இது உடனடியாக களையப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.