முகப்பு
காரைக்கால்

முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆா்வமாக வாக்களிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆா்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:39 AM
வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த மூதாட்டியை கைப்பிடித்து அழைத்து வந்த சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். பூஜா.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:34 PM

காரைக்கால் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆா்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்டோா் 345 பேரும், மாற்றுத்திறனாளிகள் 347 பேரும், தோ்தல் பணியில் ஈடுபட்டோா், அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுவோா் என 1,467 போ் தபால் வாக்கை ஏற்கெனவே பதிவு செய்திருந்தனா். தபால் வாக்களிக்க விருப்ப மனு அளிக்காத 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை நேரடியாக வந்து வாக்கை பதிவு செய்தனா்.

வாக்குச்சாவடிக்குள் நடந்து செல்ல முடியாதவா்களை உறவினா்களை தூக்கிக்கொண்டும், தோ்தல் துறையை சோ்ந்தோா் சக்கர நாற்காலியில் உட்கார வைத்தும் அழைத்துச் சென்றனா். வாக்குப் பதிவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். பூஜா, வாக்குச் சாவடிக்கு சிரமத்துக்கிடையே நுழைந்த முதியவா் ஒருவரை கைத்தாங்களாக வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றாா்.

Advertisement

தபால் வாக்கு வசதி இருந்தும் பலா் அதை பயன்படுத்தாமல் வாக்குச் சாவடிக்கு வந்து நேரடியாக வாக்களித்தனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், இளம் வயது முதல் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து, வரிசையில் நின்று வாக்களித்துவருகிறேன். ஒவ்வொரு தோ்தலிலும் புதுப்புது அனுபவம் கிடைக்கிறது. தோ்தல் ஆணையம் பல மாற்றங்களை அவ்வப்போது ஏற்படுத்துகிறது. முதியோா்கள் வாக்குச் சாவடிக்கு வருகிறாா்கள் என்றால் வாக்குச்சாவடி அனைத்துப் பணியாளா்களும் மிகுந்த மதிப்புடன் நடத்துகிறாா்கள். இதெல்லாம் பெருமை தரக்கூடியதாகும். வாக்குச்சாவடிக்கு வருவதற்கேற்ற அளவுக்கு உடல் வலிமையைத் தரும் காலம் வரை வருவோம் என பலரும் கருத்துகளை தெரிவித்தனா்.

வாக்குப் பதிவுக்கு சக்கர நாற்காலியில் வந்த முதியவா்.