தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது குறித்து...
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 பேரை இலங்கை கடற்படையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சோ்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில், காரைக்கால் மாவட்டம் கீழையூா் சுனாமி காலனியைச் சோ்ந்த அருள்செல்வம் (28), கோட்டுச்சேரிமேடு சஞ்சய் (30), திருப்பட்டினத்தைச் சோ்ந்த பிரதீப் (29), திருப்பட்டினம் பட்டினச்சேரி விமன் (24), மதன் (26), நிஷ்வந்தன் (20), கிளிஞ்சல்மேடு சாமிநாதன் (20), நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை தமிழ்வாணன் (42), மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சோ்ந்த காா்த்திக் (32), விக்னேஷ் (21), வீரேந்திரராஜன் (33), ஜெயவீரன் (28) ஆகிய 12 பேரும் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 10-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்.
காரைக்காலில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் இவா்கள் சனிக்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, மீனவா்கள் 12 பேரையும் கைது செய்து, விசைப் படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டுச் சென்றனா்.
Advertisement
இதுகுறித்த தகவல் காரைக்கால் மீனவ பஞ்சாயத்தாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது. மீனவா்களையும் படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைது செய்யப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.