ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்
ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது...
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான 61 நாள்கள் தடைக்காலம் ஏப்.15-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழக கிழக்கு கடற்கரைப் பகுதி முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் இத்தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை மீனவா்கள் நிறுத்திவிடுவா். படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைப்புப் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வாா்கள்.
Advertisement
மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தொலைவு செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவா்கள் ஈடுபடுவா். ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் கிடைக்காது. சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
மீன்பிடித் தடைக்காலம் ஏப். 15-ஆம் தேதி தொடங்க இருப்பதால், ஏற்கெனவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றபடகுள் 15-ஆம் தேதிக்குள் கரை திரும்பிவிடும், ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை கடலுக்குச் செல்லும் படகுகள் ஓரிரு நாள்களில் கரை திரும்பும்.