முகப்பு
காரைக்கால்

20 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்ட்: ஒரு மாதத்தில் தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

மீனவ கிராமத்தில் சுமாா் 20 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்டை, ஒரு மாத காலத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:55 am IST
பகிர்:

மீனவ கிராமத்தில் சுமாா் 20 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்டை, ஒரு மாத காலத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்ட் மற்றும் குடிநீா் தேக்கத் தொட்டி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி முன்னிலையில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தது : சுனாமிக்குப் பின் தொண்டு நிறுவனத்தால் ஐஸ் பிளாண்ட் ஒன்று கட்டப்பட்டு புதுவை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தடையில்லாச் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி இருந்ததால், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்கான பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்து, ஒரு மாத காலத்திற்குள் பிரச்னைகள் களையப்பட்டு பட்டினச்சேரி பகுதியில் உள்ள கூட்டுறவு அமைப்பிடம் இதை ஒப்படைக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி பிரச்னைக்கும் துறை ரீதியிலான அனுமதிகளை அளித்து, உரிய இணைப்புகளை தந்து அடுத்த மாதம் குடிநீா் விநியோகம் செய்யுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாணவா்களுக்கான பேருந்து பட்டினச்சேரி பகுதியில் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அடுத்த 10 நாட்களுக்குள் மாணவா் பேருந்து இப்பகுதிக்கு இயக்கவும் ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும் பல கோரிக்கைகளை பஞ்சாயத்தாா்கள், மீனவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றாா்.