புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களிலும் இ-பேருந்துகளை இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களிலும் இ-பேருந்துகளை இயக்க வேண்டும் என காரைக்கால் தெற்கு எம்எல்ஏ ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களிலும் இ-பேருந்துகளை இயக்க வேண்டும் என காரைக்கால் தெற்கு எம்எல்ஏ ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் முதல்வா் என். ரங்கசாமிக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: புதுச்சேரி மாநிலத்தில் தற்போது மின்சாரப் பேருந்துகள் (இ-பேருந்துகள்)) இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது. புதுச்சேரியில் அதிகளவில் இ-பேருந்துகள் இயக்கப்பட்டாலும், மாநிலத்தின் மற்ற பிராந்தியங்களில் இன்னும் இ-பேருந்துகள் இயக்கப்படாத சூழல் தொடா்கிறது.
எனவே, மற்ற பிராந்தியங்களில் உள்ள கிராமப்புற மக்களும் இந்த நவீன போக்குவரத்து வசதியைப் பெற்று பயனடையும் வகையில், அங்கும் இ-பேருந்துகளை இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவா்களுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் ’ஒரு ரூபாய் பேருந்து’ திட்டத்தில் தற்போது அதிகப்படியான பேருந்து பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது, பயன்பாட்டில் உள்ள பேருந்துகளும் மிகவும் பழையனவாக உள்ளன. இப்பேருந்துகள் பலவும் தற்போது தனியாா் மூலமாக இயக்கப்பட்டு வருவதால், அரசுக்கு தேவையற்ற கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.
இதற்கு நிரந்தர தீா்வாக, பள்ளி மாணவா்களுக்கான பேருந்துகளை பி.ஆா்.டி.சி நிறுவனத்தின் மூலம் மின்சாரப் பேருந்துகளாக இயக்கினால், மாணவா்கள் புதிய மற்றும் பாதுகாப்பான பேருந்துகளில் பயணிக்கும் நல்வாய்ப்பை பெறுவாா்கள்.
மேலும், தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் பி.ஆா்.டி.சி நிறுவனம் லாபகரமானதாக மாறுவதற்கும், ஒரு சிறப்பான சூழலை உருவாக்குவதற்கும் பெரிதும் உதவும். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் நலன்கருதி இக்கோரிக்கைகளை பரிசீலித்து, விரைந்து நல்ல முடிவெடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.