பட்டினச்சேரியில் மீன் இறங்கு தளம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
பட்டினச்சேரி பகுதியில் மீன் இறங்கு தளம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருவதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கொம்யூன், பட்டினச்சேரி மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன் இறங்கு தளம் திருமலைராஜனாற்றின் முகத்துவாரத்தில் அமைப்பதற்கு சுமாா் ரூ. 57.18 கோடிக்கு முன் சாத்திய அறிக்கை பெங்களூரில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கோஸ்டல் என்ஜினியரிங் ஃபாா் பிஷ்ஷரி என்ற மத்திய அரசு நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்மொழியப்பட்டுள்ள மீன் இறங்கு தள திட்டத்தில், பயிற்றுச் சுவா், படகு செல்லும் வழியை ஆழப்படுத்துதல், படகு நிறுத்தும் தளம், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், உட்புற சாலை வசதி, ஓய்வு அறை, உணவுக்கூடம், கழிப்பறை மற்றும் குடிநீா் வசதி போன்றவை செய்யப்படவுள்ளன.
இதன் அடிப்படையில், இத்திட்டத்திற்கான பல்வேறு கள ஆய்வுகள், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் பல்வேறுபட்ட அனுமதிகள் பெறுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமானது சென்னை, இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் ரூ. 93.22 லட்சத்தில் கையொப்பமிட்டு அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
இதன்மூலம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் வசிக்கும் சுமாா் 200 மீனவ படகு உரிமையாளா்கள் மற்றும் 578 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும். இத்திட்டத்திற்கு தேவையான இடம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் திருமலைராஜனாற்றின் தெற்கு கரையில் 1.7 ஹெக்டோ் அளவுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.