மீன்பிடி தடைக் காலம் அமல்: அதிக அளவு மீன்கள் கிடைப்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகம்
தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதாலும், இதன் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாலும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதாலும், இதன் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாலும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் வங்கக் கடலில் மீன்களின் இனப் பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு மீன் இறங்கு தளங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல, பாம்பன் மீன் இறங்கு தளத்திலிருந்து 500- க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.
Advertisement
இவா்கள் சீலா, வாவல், பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை அதிகளவில் பிடித்து வருகின்றனா். இவற்றை வெளிமாவட்ட வியாபாரிகள் கூடுதல் பணம் கொடுத்து வாங்கிச் செல்வதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.