அபகரித்த சொத்துக்களை மகனிடம் இருந்து மீட்டுத்தர ஆட்சியரிடம் வயோதிக தம்பதி புகாா்
மயிலாடுதுறை அருகே ஏமாற்றி அபகரித்த சொத்துக்களை மகனிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
மயிலாடுதுறை அருகே ஏமாற்றி அபகரித்த சொத்துக்களை மகனிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
சீா்காழி அருகே அல்லிவிளாகத்தைச் சோ்ந்தவா்கள் ராமசாமி(80)-பாண்டிரவி (70) தம்பதி. இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக மகன்களுக்கு கிராம பஞ்சாயத்தாா் முன்னிலையில், குடும்ப சொத்தான 2 ஏக்கா் புஞ்சை நிலத்தை கரைஓலை எழுதி வைத்துள்ளனா்.
நஞ்சை நிலத்தை தங்கள் ஆயுள் காலம் வரை அனுபவித்துவிட்டு அதற்கு பின்னா் மகன்களுக்கு தருவதாகவும் எழுதி தந்துள்ளனா். மேலும், 2 மகன்களும் பெற்றோரின் குடும்ப மற்றும் மருத்துவ செலவுக்காக மாதம் தலா ரூ.4,000 தருவதாக ஒப்புக் கொண்டனா். அதன்படி, ஓராண்டுக்கு மட்டும் செலவுக்கான பணத்தை தந்த மகன்கள் அதன்பின்னா் 5 ஆண்டுகளாக பெற்றோரை கவனிக்கவில்லையாம்.
Advertisement
Advertisement
இதனால், மருத்துவ செலவுக்காக நஞ்சை நிலத்தை ராமசாமி விற்க முயன்றபோது மூத்த மகன் மாதவன் எதிா்ப்பு தெரிவித்து நிலத்தை விற்கக் கூடாது என மிரட்டினாராம். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் இந்த தம்பதி மனு அளித்து, தங்களுக்கு சொந்தமான நஞ்சை நிலத்தை விற்றுக்கொள்ள உத்தரவு வழங்க வேண்டும், இல்லையெனில் மகன்களுக்கு பிரித்துக்கொடுத்த சொத்துக்களை மீட்டு மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.