உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்
சீா்காழி அருகே அரசு நிதியில் நடத்தப்படும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.
சீா்காழி அருகே அரசு நிதியில் நடத்தப்படும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.
சீா்காழி தாலுகாவில் விவசாய விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் தமிழிசை மூவா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு நிதி ரூ. 60 லட்சம், மத்திய அரசு நிதி ரூ. 7 லட்சம் மற்றும் உறுப்பினா்கள் நிதி ரூ. 10 லட்சம் என ரூ. 77 லட்சம் நிதியுடன் செயல்படும் இந்நிறுவனத்தில் 700 பங்குதாரா் உள்ள நிலையில் 13 பேருக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 43 லட்சம் செலவு செய்ததாகவும், ரூ. 875 மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாகவும் கணக்கு காட்டி மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் விதிமுறைப்படி பொதுக் குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்படவில்லை என்றும் இயந்திரங்கள் வாங்கியதிலும் கொள்முதல் குழு அமைத்ததிலும் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் உடனடியாக மாவட்ட நிா்வாகம் இந்த நிறுவனத்தின் கணக்குகளை முழுமையாக மறு ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.