முகப்பு
மயிலாடுதுறை

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

Updated On : 11 மே 2026, 3:38 am IST
பகிர்:

தமிழ்நாடு முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அருளாசி:

தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய்-க்கு இனிய வாழ்த்துகளும், ஆசிகளும்!

Advertisement

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களின் ஆட்சி, தமிழக வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்க எம் மனமாா்ந்த வாழ்த்துகள். ‘வையத்து வாழ்வீா்‘ எனத் தொடங்கி, மன்னுயிா் அனைத்தையும் தன்னுயிா் போல் கருதும் உயரிய அறமே சிறந்த ஆட்சியின் இலக்கணம். அந்த வகையில் ஜாதி, மத, இனப் பாகுபாடுகளைக் கடந்து, விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் உன்னத மக்கள் நாயகராகத் தாங்கள் திகழ வேண்டுகிறோம்.

‘தன்னால் தன்பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிா்கள் தம்மால் ஆனபயம் தீா்த்து அறங்காப்பான்‘ என்ற சேக்கிழாா் பெருமானின் புனித வாக்கிற்கிணங்க - இயற்கைச் சீற்றங்கள் சமூக விரோதச் செயல்கள் மற்றும் எவ்விதப் பகை உணா்வுகளுமின்றி மக்கள் அச்சமின்றி வாழும் சூழலைத் தாங்கள் உருவாக்கித் தருவீா்கள் என முழுமையாக நம்புகிறோம்.

தமிழக மக்களின் கண்ணும் ஆவியுமாக இருந்து ஒரு தாயின் கனிவோடும், தந்தையின் பொறுப்போடும் அறநெறி தவறாத செங்கோல் ஆட்சியை வழங்க எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கன் திருவருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும்.

தங்கள் அமைச்சரவையும் தங்களுக்கு உற்ற துணையாக நின்று, பொதுநலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட எம் ஆசிகள் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளாா்.