ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
நாகூரில் ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகூரில் ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை அருகேயுள்ள நாகூர் காதர்ஷா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது உசேன் (40). இவர், சென்னையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த முஹம்மது உசேன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை, தனது ஜவுளிக் கடையில் வேலை செய்து வரும் நாகூர் ரெட்டைகம்மாளத் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (20) என்பவரிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில், நாகூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக், ரஹீம் மேலும் 2 பேர் பிரவீன் குமாரிடம், இருசக்கர வாகனத்தைக் கேட்டு தகராறு செய்தனராம். இதுகுறித்து, பிரவீன்குமார் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவருக்கு ஆதரவாக முஹம்மது உசேன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை நாகூர் பகுதியில், காரில் சென்றுக்கொண்டிருந்த முஹம்மதுஉசேனை வழிமறித்த ஒரு கும்பல், அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கார் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, முஹம்மது உசேன் நாகூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் முஸ்தாக், ரஹீம், பிலால், தாரிக் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.