தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி
மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை 9-ஆவது தேசிய வாக்காளர்
மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை 9-ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் நடைப்பயண பேரணி நடைபெற்றது.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, லியோ சங்கம் மற்றும் ரோட்டராக்ட் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற மாணவர்களின் நடைப் பயணப் பேரணி மற்றும் சைக்கிள் பேரணியை ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
கல்லூரியிலிருந்து தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம், மணிக்கூண்டு, கால் டாக்ஸ், கழுக்காணிமுட்டம், ஆனந்ததாண்டவபுரம், அருவாப்பாடி, கடுவங்குடி, நீடூர், பல்லவராயன்பேட்டை, திருவிழந்தூர், அரசு பெரியார் மருத்துவமனை சாலை, கச்சேரி சாலை வழியாக வந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதேபோல், கல்லூரியில் தொடங்கிய நடைப்பயணப் பேரணி மூங்கில்தோட்டம், பால்பண்ணை, அச்சுதாயபுரம், தருமபுரம் வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், தருமபுரம் ஆதீன கல்வி நிலையங்களின் செயலர் எம். திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வர் எஸ். சுவாமிநாதன், மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன், தேர்தல் வட்டாட்சியர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.