மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவா்கள்
மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவா்கள்
மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூன் 14) நிறைவுக்கு வருவதையடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல நாகை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் தயாராகி வருகின்றனா்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு, ஃபைபா் படகுகள் மட்டும் குறிப்பிட்ட தொலைவு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.
Advertisement
Advertisement
நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலத்தில் நாகூா் முதல் கோடியக்கரை வரையிலான 21 மீனவ கிராமங்களில் கரைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீன்பிடி உபகரணங்கள், உணவுப் பொருட்கள், டீசல், ஐஸ் உள்ளிட்டவற்றை ஏற்றும் பணியில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலையில் படகுகளுக்கு பூஜை போட்டுவிட்டு, விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் செல்ல தயாராக உள்ளனா். இரண்டு மாத தடைக்காலத்துக்குப் பின்னா் ஆழ்கடலுக்குள் செல்வதால், மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.