முகப்பு
திருவாரூர்

நெற்பயிரில் பச்சைப்பாசி மேலாண்மை முறைகள்

நெற்பயிரில் பச்சைப்பாசி மேலாண்மை முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.

Updated On : 28 அக்டோபர், 2016 at 3:51 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:19 AM

நெற்பயிரில் பச்சைப்பாசி மேலாண்மை முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிலையத்தின் முனைவர்கள் ராஜா. ரமேஷ், ரெ. பாஸ்கரன் ஆகியோர் கூட்டாக  வியாழக்கிழமை தெரிவித்தது:
நெல் வயல்களில் பச்சைப்பாசி அடர்ந்து படலம்போல் வளர்ந்து பச்சைப் போர்வை போன்று காணப்படும். இந்த பச்சைப்பாசிகள்  நெல்லுக்கு இடப்படும் தழைச்சத்தை எடுத்துக்கொண்டு வளரும் ஆற்றல் கொண்டவை. வயல் முழுவதும் பச்சைப்பாசி வளர்வதால் நெற்பயிரின் வேர்ப்பகுதியில் காற்றோட்டத்தை மட்டுப்படுத்தும். இவற்றினால் வேர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு சத்துக்களை எடுத்துக்கொள்ள இயலாத நிலை உண்டாவதால், நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். பாசிப் படலம் அதிகமாகக் காணப்படும்போது நெற்பயிர்கள் கருகி காணப்படும்.
ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ மயில்துத்தத்தை (காப்பர் சல்பேட்) நன்கு பொடி செய்து 10 கிலோ மணலுடன் கலந்து கோணிப்பையில் இட்டு அதை பாசன வாய்க்கால் வாய்மடையில் வைத்து, தண்ணீரானது மயில்துத்தத்தில் பட்டு கரைந்து வயலுக்குள் பாயுமாறு செய்ய வேண்டும்.
வயலில் நீரை வடிகட்டிய பிறகு 0.5 சதவீத மயில்துத்த கரைசலை (5 கிராம், ஒரு லிட்டர் தண்ணீர்) பாசிப்படலத்தின் மேல் நாற்று நட்ட 10 நாள்களுக்குப் பிறகு 10 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பச்சைப்பாசிகளைக் கட்டுப்படுத்தலாம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.