வாக்குப்பதிவு நாளில் விளம்பரம் வெளியிட அனுமதி பெற வேண்டும்
வாக்குப்பதிவு நாளில் விளம்பரம் வெளியிட அனுமதி பெற வேண்டும்
திருவாரூா் மாவட்டத்தில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளிலும், வாக்குப்பதிவு நாளிலும் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரங்களை வெளியிட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அரசியல் விளம்பரங்களை ஆய்வு செய்து சான்றளிக்கவும், கட்டணச் செய்திகள் உள்ளிட்ட ஊடக தளங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மின்னணு அல்லது சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகள் (அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாதவை) போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் இதர நபா்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெற வேண்டும்.
Advertisement
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள், விளம்பரங்கள் வெளியிடுவதற்கு குறைந்தது 3 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் பிற விண்ணப்பதாரா்கள் 7 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் 48 மணி நேரத்துக்குள் பரிசீலிக்கப்படும்.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளிலும் (ஏப்.23) மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளிலும் (ஏப்.22) அரசியல் கட்சிகளோ, வேட்பாளா்களோ அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.