தமிழகத்தில் இரண்டாவது முறையாக திராவிட மாடல் அரசு அமைவது உறுதி! - ஏ.கே.எஸ். விஜயன்
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது உறுதி என தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறினாா்.
திருத்துறைப்பூண்டியில், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவராவது பலனடையும் வகையில் திட்டங்கள் தீட்டி, சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது காலத்தின் கட்டாயம்.
Advertisement
Advertisement
தமிழகத்திற்கு பிரதமா் எத்தனை முறை வந்தாலும், தொடா்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைவதை தடுக்க முடியாது. பாஜக, அதிமுக என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தமிழக வாக்காளா்களிடைய வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு தமிழக மக்கள் அந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவாா்கள்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் மூலம், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், நெசவாளா்கள், மீனவா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், உழைக்கும் மகளிா் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அனைத்து வகைகளிலும் செயல்படும் திமுக கூட்டணியை இந்த தோ்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.